நித்திய கரும விதி
 

திருச்சிற்றம்பலம்

நித்திய கரும விதி

1. சாதாரண விதி

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.2 பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும். மலங்கழிக்கின்றபோது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும். மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும். ஜலம் தடை பட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜலவுபாதி கழித்தல் வேண்டும்.

மலஜல வுபாதி கழிந்த பின், செவிகள், கண்கள், நாசி, வாய் தொப்புள் - இவைகளில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும், கைகால் முதலிய உறுப்புக்களிலுள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றறத் துடைத்தல் வேண்டும். பின் வேலங்குச்சி ஆலம்விழுது - இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து,3 அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுளையிலை4 முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு - இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.

காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது மிகுந்த தீவிரமுமாகாது,5 முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும். அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.6 பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் - இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.7 அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் - இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் - இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று. கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை - இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும். சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, வேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது.8 சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும்9 தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். பகற் போஜனஞ் செய்த சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது. பகற்போஜனஞ் செய்த பின், சற்று நேரங் கடவுளைத் தியானித்திருக்க வேண்டும். அதன் பின் எந்த வேலை செய்யினுந் தேக கரணங்களுக்கு மெலிவு உண்டு பண்ணுகிற வேலைகளாகச் செய்யப்படாது. செய்யினும் சிறிது சிறிதாகச் செய்தல் வேண்டும்.

சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை - இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் - இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.10 இரவில் தயிர்11 கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். சுமார்12 நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக்12 கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

பெண்களுடன் தேகசம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைத் தேகசம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் - என்றால், வேறுபடாமல் - மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும். அவ்வுபாயமாவது பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே யுலாவச் செய்து கொள்ளுதலாம். ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது. தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்.13 பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு நித்திரை செய்தல் வேண்டும்.14 அதன் பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடனிருத்தல் வேண்டும். இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற் கொருவிசை செய்தல் அதம பக்ஷம். 8 தினத்திற் கொருவிசை செய்தல் மத்திம பக்ஷம். 15 தினத்திற்கொருவிசை செய்தல் உத்தம் பக்ஷம். அதன் மேற்படில் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். 4 தினத்திற்கொரு விசை செய்யில் சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும், ஆதலில், அதம பக்ஷமாயிற்று. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.

எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும். புகைக்குடி, கஞ்சாக்குடி, கட்குடி, சாராயக்குடி முதலிய மயக்கக்குடி களாகா. மலஜலத்தைச் சிறிதும் அடக்கப்படாது.15 சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது. துன்மார்க்கப்பழக்கஞ் செய்யக்கூடாது. எந்த வேலை செய்யினும், எந்த விவகாரஞ் செய்யினும், சிவசிந்தனையோடு செய்து பழகுதல் வேண்டும்.

இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து, ஓங்காரபஞ்சாக்ஷர ஞாபகஞ்செய்தல் வேண்டும்; சிவபஞ்சாக்ஷர ஞாபகஞ் செய்தல் வேண்டும்; அவசியம்.

2. பொது விதி

1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம்16
வாங்கிக் கொள்ளுதல்.

2. நாலு மாதத்திற்கு ஒரு தரம், மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு17 வாங்கிக் கொள்ளல்.

3. ஒரு வருடத்திற்கு ஒருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ்18 செய்து கொள்ளல்.

4. நாலு நாளைக்கு ஒருதரம்,அத்தி முதலிய வஸ்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந்
தீட்டல்.

5. ஒரு பக்ஷம் அல்லது ஒரு வார வட்டத்திற்கு ஒருதரம், சாவதானமாக நல்ல நினைப்போடு தன் வசத்திலிருந்து,
மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல். இது விருத்தர்களுக்கு விதித்ததல்ல.

6. வாரவட்டம் அல்லது நாலு தினத்திற் கொருதரம், முலைப்பால், பொன்னாங்கண்ணி முதலிய தயிலமிட்டுக்
கொண்டு, செம்பாகமான வெந்நீரில், மெல்லென முழுகல்.

7. இளவெயில், கடுவெயில், மழை, குளிர்காற்று, பனி - இவைகளால் உடம்பை வருத்தாமற் காத்துக் கொள்ளுதல்.

8. கடுநடை, ஓட்டம், பெருஞ்சொல், பேரோசை, இசைபாடுதல், வழக்காடுதல், பெருநினைப்பு, பெருஞ்சிரிப்பு,
பெருந்துயர், மிகுபார்வை, ஊன்றிக்கேட்டல், துர்க்கந்த நற்கந்த முகர்தல், சுவை விரும்பல், பேருண்டி,
பெருந்தூக்கம், வீண்செயல், பெருமுயற்சி, விளையாட்டு, மலமடக்கல், சலமடக்கல், தாகமடக்கல், பெருநீர்
குடித்தல், சயனஉணர்ச்சி, பயம், அகங்காரம், இடம்பம், பேராசை, உலோபம், கோபம், மோகம், மதம் - இவை
முதலிய தேகேந்திரிய கரண குற்றங்க ளடையாதிருத்தல்.

9. பழஞ்சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத்தயிர், மோர், நெய், செம்மறிப்பால், தயிர், மோர், நெய், கேழ்வரகு,
வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம் முதலிய சிற்றுண்டி, தயிர்ச்சோறு, புளிச்சோறு
முதலிய சித்திரான்னம் காரரிசிச்சோறு, முளைக்கீரை, அகத்திக்கீரை, முன்னை முதலான இலைக்கறி, சுரை,
பூசுணை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால்,
மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி, விதித்தவைகளை யனுசரித்தல்.

3. சிறப்பு விதி

1. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு19 முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.

2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.

3. அங்ஙனம் எழுந்து, சிறிதுந் தாமதியாமல், மௌனமாகச் சிறிது தூரம் நடந்து, எவ்விடத்தில் மலசலவுபாதி
நேரிடுகிறதோ, அவ்விடத்தில் அப்பொழுதே ஒன்றுஞ் சேஷ்டையில்லாமல் விரைவில்லாமல் இருந்து அறவிடுதல்.

4. பொற்றலைக்கையாந்தகரை, கரிசலாங்கண்ணி - இவைகளில் ஒன்று கொண்டு உள்ளே சிறிது சாரம் போகவும்
கபநீர் பித்தநீர் வெளியாகவும் தந்தசுத்தி செய்தல்.

5. பின்பு திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியனுதயமாகிற வரையில் கடவுளைத்
தியானஞ் செய்துகொண்டிருத்தல்.

6. உதயந் தொடங்கிச் சுமார் சாம பரியந்தம் தக்க முயற்சியோடு பழகுதல்.

7. காலையில் உண்ணாமல் சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணுதல்.

8. காலையில் சூரியோதயமானவுடன் தூதுளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக் கையாந்தகரை,
புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம்வேர் - இவைகளில் யாதாயினும்
ஒன்றைப் பசும்பாலிற் சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது
சூரணமாகவாவது பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.

9. சுமார் 15 நாழிகைக்கு உண்ணத் தொடங்கும்போது, முன்புசித்த போசன முழுதுஞ் ஜீரணித்ததை நன்றா யூன்றி
யறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசு முனைபோல்
அளவறிந்து, அந்த அளவின்படி, அதிக விரைவும் அதிக தாமதமு மில்லாதபடி சமமாகப் புசித்தல்.

10. புசிப்பில் பச்சரிசிச் சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி, தூதுளை முதலிய இளங்காய்.
பொன்னாங்கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை - இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக்காற்
பங்கு, வெந்தயம் காற்பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது
குழம்பு ரசம் முதலானவைகளைக்கொண்டு, பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலானவைகளைத்
தள்ளிப் புசித்தல்.

11. புசித்தபின்பு, மத்தியானந் தொடங்கி 25 நாழிகை பரியந்தம் சத்துவமான விவகாரங்களை மெல்லென இருந்தபடி
நடத்தல், பிறர்க்கு விசேஷங் கேளாவகை படித்தல், மெல்லெனப் பேசல் - இவையன்றி நல்ல
நினைப்போடிருந்தல்.

12. காலை, மத்தியானம், சாயங்காலம் - இப்பொழுதுகளிலும் மத்தியிலும் நித்திரை செய்யாதிருத்தல்.

13. மத்தியான போஜனம் செய்கிறபொழுது, அடிக்கடி தாகநீர் குடியாமல், போஜனஞ் செய்தபின்பு, ஒரு தரமாக
இளஞ்சூடுள்ள வெந்நீரைக் கிரமமாகத் தாகத்துக்குக் கொண்டு, குளிர்ந்த ஜலம் சிறிதுங் கொள்ளாது தள்ளுதல்.

14. மத்தியானத்தில் சுமார் 5 நாழிகை பரியந்தஞ் செவ்வையாக ஓரிடத்திலிருந்து, மனத்தை ஒருவழிப்படுத்தித் தெய்வ
சிந்தனை யோடிருத்தல்.

15. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி, காலைப்போஜனம்,
அந்திப்போஜனம் முதலானவை யில்லாதிருத்தல்.

16. சாயங்காலத்திலும் 5 நாழிகை யாதொரு முயற்சியும் இல்லாமல், ஓரிடத்திலசையாதிருந்து தியானித்தல்.

17. இரவில் 10 நாழிகைக்குள் மத்தியான போஜனத்துக்கு அரைத்தரமாகப் புசித்தல்.

18. அதற்குமேல் இராத்திரி 15 நாழிகை பரியந்தம் மனத்தையடக்கித் தியானித்திருத்தல்.

19. 15 நாழிகை தொட்டு இருபத்திரண்டரை நாழிகை20 பரியந்தம் மெல்லெனத் தூங்கல்.

20. படுத்து விழிக்கிற பரியந்தம் இடக்கை கீழிருக்கச் செய்தல்.

21. ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீசம், பயம் பூச்சியம் ஆகப் பெறுதல்.

திருச்சிற்றம்பலம்
நித்திய கரும விதி முற்றிற்று.
_____________________________________________________________________________________

1. வைகறைத் துயிலெழு - ஆத்திசூடி
வைகறை யாமம் துயிலெழுந்து நான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை. - ஆசாரக்கோவை 4

புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும்
சுத்த நரம்பினறற் றூய்மையுறும் - பித்தொழியும்
தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி
காலை விழிப்பின் குணம் - பதார்த்தகுண சிந்தாமணி

அதிகாலையில் விழிப்பதால் புத்தி மனத்துடன் பொருந்தும்; தெளிவு உண்டாகும்; நரம்புகள் எல்லாம் சரியான நிலையை அடைந்து தூய்மையை அடையும்; வாதபித்த சிலேத்துமங்கள் தத்தம் நிலையில் சேரும்.

2. இஃது இல்லறத்தார்க்கு மட்டுமே விதித்தது. துறவறத்தார்க்குத் தாம்பூலம் தரித்தல் விலக்கு.

மேற்றிலையும் கீழ்க்காம்பும் வெந்நரம்பும் வெண்பல்லைத்
தீத்தாமல் வெற்றிலையைத் தின்றாக்கால் - மாற்றலரை
வெல்லப்போர் செய்யும் விறல்நெடுமா லாயிடினும்
செல்லப்போய் நிற்கும் திரு.
காலை பிளவதிகம் கட்டுச்சி நீறதிகம்
மாலை இலையதிகம் வாணுதலே - சாலவே
ஆம்போது நீரிறக்க லாகாது சொன்னேன் கேள்
தாம்பூலங் கொள்வார் தமக்கு.
வெற்றிலைக்கு முன்னே வெறும்பிளவை நாவிலிட
நற்றிருவா மங்கை நடப்பளே - வெற்றிலையை
முன்னிட்டுப் பின்பிளவை வேய்வரே யாமாயின்
மன்னரைப் போலாவார் மகிழ்ந்து.

வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளி எறிய வேண்டும். முதுகு நரம்பை நகத்தால் எடுத்துவிட வேண்டும். பல் துலக்கு முன் தாம்பூலந் தரிக்கலாகாது.

காலையில் பாக்கு மிகுதியாகவும், உச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ள வேண்டும். வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு மென்றவுடனே முதல் இரண்டு முறை ஊறும் நீரை விழுங்கலாகாது; உமிழ்ந்து விட வேண்டும். தாம்பூலந் தரிக்கத் தொடங்கும்போது முதலில் பாக்கைப் போட்டுக் கொள்ளலாகாது. வெறும் வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, பின்னரே பாக்கைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

3 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்பது பழமொழி. பல் துலக்குவதற்குரிய கொம்புகள் இல்வாழ்வார்க்கு வேறாகவும் துறவிக்கு வேறாகவும் விதிக்கப்பட்டுள்ளன. தாது புஷ்டியைத் தரக்கூடியவை இல்வாழ்வார்க்கும், போகத்தில் இச்சையைக் குறைக்கக் கூடியவை துறவிக்கும் விதிக்கப்பட்டுள்ளன.

இல்வாழ்வார்க்கு வேம்பு, வேல், பூல், ஆல், மா, அத்தி, தேக்கு, நாவல், ஆத்தி, கடம்பு, விளா, அசோகு, குருக்கத்தி, சண்பகம் முதலியன.

வேலுக்குப் பல்லிறுவு வேம்புக்குப் பல்லொளிவு
பூலுக்குப் போகம் பொழியுமே - ஆலுக்குப் பல்வலியும் நீங்கும் பகருமகிழ் நாயுருவி
இல்வாழ் வோற்கில்லை இசை.

துறவிக்குப் பெருவாகை, நொச்சி, மருது, மகிழ், பெருங்குமிழ், புங்கு, நாயுருவி, கருங்காலி, கையாந்தகரை, காட்டாமணக்கு முதலியன.

பெருவாகை நொச்சி பெருங்குமிழே புங்கு
கருங்காலி நாயுருவி காயா - மருதுமகிழ் கையாந்தகரையுடன் காட்டா மணக்காகும் மெய்யார் துறவி தனக்கு.

பட்ட மரம், பாளை, கைவிரல்கள், செங்கல், மண், மணல், சாம்பல், கரி ஆகிய எட்டும் பல் துலக்குதற்கு ஆகாதனவாம்.

பட்டமரம் பாளை பகருமணல் மண் சாம்பல்
சுட்டமரம் செங்கல் தொடுவிரல்கள் - எட்டுவிதம் பற்றுலக்க வீழும்பல் பல்லெல்லாம் நோய் கொள்ளும்
கற்றறிந்தார் கண்டதிது காண்.

4. கையாந்தகரையும் தூதுளையும் ஞானப் பச்சிலைகள். இவற்றை அடிகள் அடிக்கடி வற்புறுத்தி யருளுவர்.

5. ஆலசியம் - தாமதம். தீவிரம் - விரைவு.

6. 'மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்' - பதார்த்த குண சிந்தாமணி.

7. உப்பு, புளி, மிளகாய் இம்மூன்றும் உடலுக்குக் கேடு பயப்பவை. இவற்றை எவ்வளவுக் கெவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது. புளிக்குப் பதிலாக எலுமிச்சையையும் மிளகாய்க்குப் பதிலாக மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம்.

8. பகல் உணவுக்குப்பின் சற்று துயில வேண்டும்
இரவு உணவுக்குப் பின் சற்று உலாவவேண்டும்

Sleep a while after dinner
Walk a while after supper

என்பது பழமொழி. பகல் உணவுக்குப்பின் கொள்ளும் துயில் ஆழ்ந்த துயிலாக இருத்தலாகாது. அறிதுயிலாக, அரைத்தூக்கமாக இருத்தல் வேண்டும். இதனாற்றான் அடிகள் படுத்து எழ வேண்டும் என்றனர். 'பகலுறக்கஞ் செய்யோம்' என்பது பதார்த்த குண சிந்தாமணி.

9. 'கட்டுச்சி நீறதிகம்' - அடிக்குறிப்பு 2 பார்க்க.

10. பகலுணவிற் பாதியளவே இரவுணவு கொள்ள வேண்டும்.
3 சிறப்புவிதி 17 பார்க்க.

11. காலை மாலை யுறங்குவர் காரிகை
கோல மேனி குலைந்தபின் கூடுவர்
சாலி ராத்தயிர் சாதமொ டுண்பவர்
மாலைநேரினும் மாது பிரிவளே. - தனிப்பாடல் திரட்டு

காலை மாலை உறங்குவோரும், விதவைகளையும் தம்மின் மூத்தபெண்களையும் சேர்வோரும், இரவு உணவில் தயிர் சேர்த்துக் கொள்வோரும் திருமாலைப் போன்ற செல்வமுடையராயினும் திருமகள் அவர்களை விட்டு நீங்குவாள்.

12. 'மாலை இலையதிகம்' - அடிக்குறிப்பு 2 காண்க.

13. 'இடதுகையிற் படுப்போம்' - பதார்த்த குண சிந்தாமணி.

14. 71/2 நாழிகை = 3 மணி. 10 நாழிகை = 4 மணி.

15. 'இரண்டடக்கல் செய்யோம்' - பதார்த்த குண சிந்தாமணி.

16. விரேசனம் - பேதி

17. வமனம் - வாந்தி

18. நசியம் - மூக்கில் இடுதல், உறிஞ்சல்,

19. சீர்பெறும் அநாதி சிவாகமப் படியே
நேர்பெறு நித்திய நியமம் புரிவோர்
கதிரவன் எழுமுன் கடிகை ஐந்தென
மதிபெற எழுந்து மகேசனை நினைந்தே - நியம அகவல்

கடிகை - நாழிகை.

20. 15 நாழிகை முதல் 221/2 நாழிகை வரை = 12 மணி முதல் 3 மணிவரை.


VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013